சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும்,  பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,   இருமொழிக்கொள்கை… பணப் பிரச்சனை இல்லை… இனப் பிரச்சனை, என்றும், தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என கூறினார்.

தமிழக சட்டசபையில், இன்று  மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம்  கொண்டு வரப்பட்டது.  இன்று காலை வழக்கம்போல நிகழ்ச்சிகள் தொடங்கியதும், முதலாவதாக கேள்வி நேரம் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, இருமொழிக்கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க.வை தவிர்த்து அனைத்து கட்சிகளும் தங்களது உணர்வை வெளிப்படுத்தின.

தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழகத்துக்கு உரிய நிதியை தராவிட்டாலும் இனமானத்தை அடகு வைக்கும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல.

இது பண பிரச்னை அல்ல இன பிரச்னை.

இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும். பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம் என உறுதியாக உள்ளோம்.

இந்தி மொழியால் தான் பணம் வரும் என்று கூறினால் அந்த பணமே வேண்டாம் என தீர்மானிப்போம்.

திராவிட ஆட்சியில் தமிழ் மொழி காப்பதே இரு கண்கள்.  யார் எந்த மொழியை கற்கவும் நாம் தடையாக இருந்ததில்லை. எந்த மொழிக்கும் எதிரானவர் அல்ல நாம்.  இன்னொரு மொழியை திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்றுவிடும் என்பதை நாம் அறிவோம்.

இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கின்றனர்.  மாநிலங்களை தங்கள் கொத்தடிமைகளாக நினைப்பதாலேயே மொழியை திணிக்கிறது.

மாநில உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.  மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமையை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும்.

இவ்வாறு பேசினார்.