சென்னை: வாழ்நாள் முழுவதும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன்பட்டிருப்பேன் என சட்டப்பேரவையில் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.

சட்டப்பேரவையில் இன்றுமுதல்  மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் தொடங்கி உள்ளன. மானிய கோரிக்கை விவாதத்தின்   முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 23) நீர்வளத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, இந்தக் கூட்டத் தொடரில் பேரவையில், மூத்த உறுப்பினரான அமைச்சர் துரைமுருகனின்  அரை நூற்றாண்டை நிறைவுசெய்யும்  சேவையை  பாராட்டி முதல்வர் ஸ்டாலின்  சிறப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அதன்மீது முதல்வர் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டி பேசினார். அப்போது அமைச்சர் துரைமுருகன் கண்கலங்கினார்.

பின்னர், அமைச்சர் துரைமுருகன் நன்றி தெரிவித்து பேசினார். அப்போது, கண்கலங்கியதுடன் அவரால் பேச முடியாத நிலை சிறிது நேரம் நீடித்தது.  பின்னர்,  என்ன பேசுவது என்றும் தெரியவில்லை என்று கூறியவர்,  எனது வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிபெற்று இருந்தாலும் முத்தாய்ப்பாக அவையில் தீர்மானம் கொண்டுவந்தது நெஞ்சம் நெகிழ்ந்தது என்று கூறியதுடன் தொடர்ந்து பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் கொஞ்சம் அழுத்தமானவர் என்று கருணாநிதி சொல்வார், அவர் என்னிடம் காட்டிய பாசத்தைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போயுள்ளேன். கல்லூரியில் முரசொலி செல்வம் என் நண்பனாக இருந்தார், மாணவனாக இருந்தபோதே என்னை நண்பனாக நடத்தியவர் கருணாநிதி. அவர் ஒருமுறைகூட என்னிடம் சாதியைப் பற்றி கேட்கவில்லை. என் தலைவர் அவர்தான்; என் வழிகாட்டி அவர்; எனக்கு எல்லாமுமாக இருந்தவர். அவரது மறைவிற்குப் பின் வெற்றிடம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஸ்டாலின் அந்த வெற்றிடத்தை நீக்கிவிட்டார், தந்தையின் பாசத்தை மிஞ்சும் அளவிற்கு என் மீது பாசத்தைக் காட்டுகிறார் ஸ்டாலின். எனது வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருப்பேன் இதைவிட எனக்கு வேறு வேலையில்லை  என கூறினார்.