சென்னை: ஊழல் வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தானாகவே விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகளில் இருந்த விலகமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் பொன்முடிமீதான வழக்கில், நீதிபதிக்கு எதிரான திமுகவைச் சேர்ந்த   மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, நீதிபதியை மாற்றக்கோரிய நிலையில், விசாரணையை மாற்ற முடியாது தானே விசாரிப்பேன் என்று கூறிய நிலையில், தற்போது கேகேஎஸ்எஸ்ஆர் மீதான வழக்கிலும்,  அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதியே இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என கூறிய நிலையில்,  நான் வழக்கிலிருந்து விலக போவதில்லை.. வேணும்னா உச்சநீதிமன்றத்துக்கு போங்க என நீதிபதி வெங்கடேஷ் கூறினார்.

இந்த வழக்குகளை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி பெற்றுள்ளதாகவும், அதன்பிறகு தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன். தான் எடுத்த வழக்குகளிலிருந்து விலகப்போவது இல்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, முன்னாள் அமைச்சர்கள் மீது புதிய அரசு வழக்கு தொடருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. ஆனால், இதுபோன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொதுவாக தண்டிக்கப்படுவது இல்லை. பின்னர் தங்களது ஆட்சி பதவிக்கு வந்ததும், வழக்குகள் வாபஸ் பெறப்படுகிறது. இதுபோன்ற வழக்குகளை விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை, ஆட்சியாளர்களுக்கு சாதகமாக செயல்படுவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், லஞ்ச ஒழிப்பு காவல்துறை, ஆட்சியாளர்களுக்கு மாதிரி பச்சோந்தியாக மாறுகிறது என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ஏற்கனவே திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு மற்றும் அதிமுகவை முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ், வளர்மதி போன்றோர் சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள்மீதான வழக்குகளை தாமாகவே முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார். கீழமை நீதிமன்றங்களின் நடவடிக்கை முறைகேடாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் பொன்முடிதான வழக்கின் விசாரணையின்போது, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற லஞ்ச ஒழிப்பு காவல்துறை கேட்டுக்கொண்ட நிலையில், அதை மாற்ற முடியாது என நீதிபதி கூறியிருந்த நிலையில், தற்போது கேகேஎஸ்எஸ்ஆர் வழக்கிலும், விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற முடியாது என கறாராக தெரிவித்து உள்ளார்.

2006 முதல் 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். தனது ஆட்சி காலத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி, அவரும், அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத் துக்கு மீறி சொத்து சேர்த்ததாக லஞச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.  44லட்சத்து 56 ஆயிரத்து 67 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.

கடந்த 2012ம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சில வருவாய் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறியும், 28 வருவாய் விவரங்களை கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. இதையடுத்து,  தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிடப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுபோல, 2006 முதல் 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக 76 லட்சத்து 40 ஆயிரத்து 433 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை, அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு சுமார் 10 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில். அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்ததாகவும் எனவே, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவரையும், அவரது மனைவி மணிமேகலையையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2022ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று (20ந்தேதி)  விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதியே இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது.

அதேபோல், அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வரக்கூடிய ஒரு விஷயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

அதற்கு  பதில் கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமைநீதிபதி அனுமதி பெற்றுதான் தாமாக முன்வந்து வழக்குகளை விசார ணைக்கு எடுத்துள்ளேன். எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை. வேண்டும் என்றால், இந்த வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

இதனையடுத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான வழக்கை நவம்பர் 2-ம்தேதிக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவம்பர் 9-ம் தேதிக்கும் ஒத்திவைத்தார்.