ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் பத்தாயிரம் கோடி கருப்புபணம் இருப்பதாக வருமான வரித்துறையிடம் டிக்ளேர் செய்ததை தொடர்ந்து 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை உடனடியாக தடை செய்வதன் மூலம் கருப்புப்பண புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தானே முன்வந்து வருமானத்தை அறிவிக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ரூபாய் 65,000 கோடி கருப்புப்பணமாக பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் 13,000 கோடி ஹைதராபாத்தை சேர்ந்தவர்களிடத்தில் இருப்பதும், அதிலும் பத்தாயிரம் கோடி ஒரே ஒருவரிடம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சட்டப்படி அவர் யார் என்பது வெளியே தெரிவிக்கப்படாது. அவர் ஒரு பெரிய தொழிலதிபராக இருக்கலாம்.
இந்தப்பணத்தில் 40 முதல் 45 வரை அபராதமாக விதிக்கப்பட்டதும் அது வெள்ளைப்பணமாகிவிடும். ஆனாலும் உடனடியாக 1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்வதன் மூலம் கருப்புப்பண புழக்கத்தை வெகுவாக கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் இந்தப் பணம் தேர்தல் நேரங்களில் தேர்தலில் ஓட்டுக்களை விலைக்கு வாங்க பயன்படுத்தப்படலாம்.
அதே நேரம் அப்பணம் வங்கிகளில் சேமிக்கப்படும்போது ஸ்மார்ட்போனில் ஆன்லைன் வழியாக அவற்றை பயன்படுத்துவது மிகவும் எளிதாகும் என்றும் ஒருவர் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதை கண்காணிப்பதும் எளிதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Patrikai.com official YouTube Channel