சென்னை: மணல் கடத்தல் வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டது, எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்த வாரம் இத்தனை கிரிமினல்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பெருமிதமாக அறிவித்து வரும் நிலையிம்,  மணல் கடத்தல் தொடர்பான வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

ரேசன் அரிசியை கடத்தியவர்மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்றம் காவல்துறையை கடுமையாக சாடி உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம்,  ரேஷன் கடையில் விற்கப்பட்ட 7 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசியை கர்நாடகாவுக்கு கடத்தியதாக,  கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரை  போலீசார் கைது செய்தனர். பின்னர்அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில்சிறையில் அடைக்க சேலம் மாவட்டஆட்சியர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தனது கணவர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி சத்தியமூர்த்தியின் மனைவி பூஞ்சோலை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில்  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது,   மனுதாரரின் கணவர் அரசு குடோனில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தியிருந்தால் அவர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும், அவருக்கு,  ரேசன்  அரிசியை விற்றவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள்கேள்வி எழுப்பினர்.

மேலும், தேவைப்படாத நபர்களுக்கு ரேஷன் அரிசியை விநியோகிக்கக்கூடாது என்றும், இதுபோன்றசெயல்களுக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது என்றும் கருத்து தெரிவித்து, சத்தியமூர்த்தி மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்தனர்.

எதற்கெடுத்தாலும் குண்டர் சட்டத்தை போடும் காவல்துறையினர், இதுவரை,  மணல் கடத்தல் வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பியதடன், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.