டெல்லி: நான் முதல்வராக வரவில்லை, உதவி செய்யும் ஒரு சேவகராகவே வந்துள்ளேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆதரவு அளித்துள்ளார்.

டெல்லி எல்லையான சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். கெஜ்ரிவால் உடன் சில அமைச்சர்களும், கட்சியின் எம்எல்ஏக்களும் சென்றிருந்தனர்.

ஆய்வு குறித்து கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது: போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யச் சென்றேன். டெல்லியில் உள்ள மைதானங்களை, விவசாயிகளை அடைத்து வைக்கும் வகையில் சிறைகளாக மாற்றுமாறு எங்களுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

இங்கு நான் முதல்வராக வரவில்லை. உதவி செய்யும் ஒரு சேவகராகவே வந்துள்ளேன். விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து உதவி செய்ய வேண்டியது நமது கடமை என்று தெரிவித்துள்ளார்.