சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று  இலங்கை அருகே கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் சென்னை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில்  பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை, 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவள்ளூர் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வடமேற்கு திசையில் 12 கிலோ மீட்டல் வேகத்தில் நகர்ந்து அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும். இலங்கையின் திரிகோணமலை – யாழ்ப்பாணம் இடையே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று அவ்வப்பொழுது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருவதால் அயோத்தியாவில் இருந்து வந்த விரைவு ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் குறைந்த பின் ரயில் மீண்டும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]