சென்னை:  இன்று நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான  முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என  டி.என்.பி.எஸ்.சி. தலைவர்  பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நான்காம் நிலை அரசு பணிகளுக்கான குரூப்4 தேர்வு மாநிலம் முழுவதும்  4,922 மையங்களில், நடைபெறுகிறது. சுமார் 4 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு 14 லட்சம் பேர் தேர்வை எழுதுகின்றனர்.

இந்த  நிலையில் சென்னையில் தேர்வு மையத்தில்  ஆய்வு செய்த டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

; அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் 311 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 4,922 மையங்களில் குரூப் 4 போட்டி தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுத்தாள் தயார் செய்து ரகசியமாக கொண்டு செல்ல வேண்டிய நிலை, மதுரையில் மட்டும் ஒருசில பிரச்சினைகள் இருந்தது, மற்ற இடங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் பரிசோதித்த பின் அனுப்பப்படுகிறது.

குரூப்-4 தேர்வில் கேள்விகள் யாரும் பதிலளிக்க முடியாத மாறுபட்ட அளவில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகள் சில நேரங்கள் கேட்கப்படுவதால் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகிறது. கேள்விகளை தயாரிக்கும் குழுவில் உள்ளவர்கள் அதுபோன்ற கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கேள்விகளை அவர்கள் எடுத்து வந்தால் அந்தக் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அரசு பணியில் சேர வேண்டும் என்ற மிகுந்த ஆசை, ஈடுபாடு இருக்கிறது. வேலை பாதுகாப்பு அரசு பணியில் இருப்பதால் சேர்வதற்கு ஆர்வமாக உள்ளனர். தற்போது 3925 காலி பணியிடங்கள் இருந்தாலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த தேர்வு நடைபெறுவதால் காலியிடங்கள் இன்னும் அதிகமாக உருவாக வாய்ப்புள்ளது.

தேர்வுக்கான வினாத்தாள் இந்த ரகசியத்துடன் 2 கட்டமாக மத்திய தொகுப்பில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது அது முழுவதும் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை. இ

தேர்வாணையத்தின் தேர்வுகள் அனைத்தும் தேர்வரின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் தேர்வர்களுக்கு ஏற்படும். இழப்புக்கு தேர்வாணையம் எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.

கடந்தாண்டு 10,000 பேரும், நடப்பாண்டில் தற்போது வரை 11,000க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 7 தேர்வுகளை அறிவித்து அதில் 5 தேர்வுகளை முடித்துள்ளோம். குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் என்று கூறினார்.

மேலும், பேருந்தில் வந்த குரூப் 4 வினாத்தாள்கள்  குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மதுரையில் குரூப் 4 வினாத்தாள் கட்டுகளை பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக  “மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளோம், ஆட்சியரிடம் இருந்து அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.