சேலம் : சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி  1,077  மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

 சேலம் பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அவரை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வரவேற்றனர்.

முன்னதாக ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு காட்டி சில கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து  பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இதனையடுத்து  கவர்னர் ஆர்.என்.ரவி, பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்கப்பட்டார்.  அவருடன் ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் விழா மேடைக்கு வந்தார். இதனையடுத்து நடந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணவ மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி  பட்டம் வழங்கினார் .

 இதன் வாயிலாக, மேடையில் பட்டம் பெற்ற 397 மாணவர்களுடன் சேர்த்து சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 46,365 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.