சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அதன்படி,  ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பான மசோதாவுக்கும், கனிம வளம் நிறைந்த பகுதிகளுக்கு வரி விதிப்பது ஆகிய மசோதாக் களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.  தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல  மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்து வருகிறார். சில மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வருகிறார். இதனால், தமிழ்நாடு அரசு இயற்றும் மசோதாக்கள் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதற்கிடையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர்மீது உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கொண்டு வரப்பட்ட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட   கனிம வளங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா மற்றும், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட  மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா  ஆகிய இரண்டு மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கனிம வள சட்டத்தின்படி,  பழுப்புக்கரி, சுண்ணாம்புக்களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகையான கனிமங்களை பெரிய வகை கனிமங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன. மேலும்,  கரட்டுக்கல், சரளை, கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக்கல், தீக்களிமண், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 வகையான சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க இந்த சட்டம் வழி வகை செய்திருக்கிறது.

இதன்படி பெரிய வகை கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறிய வகை கனிமங்களுக்கு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் ஜனவரி 5ஆம் தேதியுடன் 28 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. அந்த 28 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சிகளில் தனி அலுவலகர்களை நியமினம் செய்யும் மசோதாகவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.