சென்னை: வார விடுமுறை – சுபமுகூர்த்த நாட்கள்: 1220 சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அதன்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளும் இந்த சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சுப எமுகூா்த்த நாளான வெள்ளிக்கிழமை (ஜன. 31) மற்றும் வார விடுமுறை நாள்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (பிப். 1, 2) ஆகிய தினங்களில் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 365பேருந்துகளும், சனிக்கிழமை 445பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 60 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 20 சிறப்புப் பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோல, பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் என ஆக மொத்தம் 1,220 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் .

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.