சீர்காழி: சீர்காழியை அடுத்து அமைந்துள்ள தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வைத்தீஸ்வரன் கோயிலில் கொடிமரத்திற்கு தங்க பத்ம பீடம் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் பங்கேற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் அமைந்துள்ளது வைத்தீஸ்வரன் கோயில். வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 16வது சிவத்தலமாகும். இக்கோவில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்டது.

தேவாரப்பாடல் பெற்ற தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதசுவாமியாக இங்கு ஈஸ்வரன் அருள்பாலித்து வருகிறார்.  இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சுவாமி அம்பாளை தரிசித்து இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். தீராத நோய்களை தீர்த்து வைக்கும் இந்த கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேசம் நடைபெற்றது.

இந்த நிலையில், கோவில் அமைந்துள்ள வைத்தியநாதர்சுவாமி சன்னதி நேர் எதிரே உள்ள கொடிமரத்திற்கு தங்க தகடுகள் பதிக்கும் வகையில்,  தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகம் வேந்தர் சேதுராமன்  5 கிலோ தங்கக்கட்டிகள் காணிக்கையாக வழங்கினார். இந்த தங்ககட்டிகளை உருக்கி தகடுகளாக மாற்றும் பணிகள் சமீப நாட்களாக நடைபெற்று வந்தன. அதன்மூலம் கொடிமரத்தில் பதிக்கும் வகையிலான தங்க ரேக்குகள், அடி பகுதி தாமரை வடிவிலான பத்ம பீடம் ஆகியவை தயார் செய்யப்பட்டது.  இதையடுத்து,  கொடிமரத்திற்கு தகடுகள் (ரேக்) பதித்திடும் பூர்வாங்க பூஜை செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யும் பணி இன்று காலை தொடங்கியது. தொடர்ந்து,  கொடிமரத்தில்   தங்க ரேக் மற்றும் தங்க பத்ம பீடம் கொடிமரத்தில் பொருத்தும் பணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து வரும் 8ந்தேதி (புதன்கிழமை) காலை தங்கக் கொடி மரத்திற்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது

இந்த சிறப்புமிகு நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார்.