டெல்லி: கோவா கேளிக்கை விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பலியாகி உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது விபத்து அல்ல கொலை என எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி. குற்றம் சாட்டி உள்ளார்.
கோவா தீ விபத்து விவகாரம் அரசியலாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கோவா மாநில அரசை கடுமையாக சாடி உள்ள ராகுல்காந்தி, இதற்கு காரணம் மாநில பாஜக அரசு என்றும், இது விபத்து அல்ல கொலை என்றும் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார்.

சம்பவத்தின் கோவாவில் உள்ள கேளிக்கை விடுதியில் காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கோவா தீ விபத்துக்கு பொறுப்பு கோவா மாநில பாஜக அரசாங்கே என குற்றம் சாட்டும் ராகுல்காந்தி, இது மாநில நிர்வாகத்தின் குற்றவியல் தோல்வி என்றும், விபத்துஅல்ல கொலை, இதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
கேளிக்கை விடுதியின் பாதுகாப்பு விஷயத்தில், அதிகாரிகள் அத்தியாவசிய பாதுகாப்புத் தரங்களை புறக்கணித்ததே இந்த விபத்துகு காரணம் என்றும், இதுகுறித்து முழுமையான விசாரணை மேற்கொளள வேண்டும் என்று கூறியதுடன், இது “பாதுகாப்பின் குற்றவியல் தோல்வி” என்றும், சோகம் “விபத்து அல்ல, கொலை” என்றும் வலியுறுத்தியுள்ளார். முழுமையான விசாரணை மூலம் பொறுப்புக்கூறலை சரிசெய்ய வேண்டும் என்றார்.
கோவாவின் அர்போரா பகுதியில் ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ என்ற கேளிக்கை விடுதி உள்ளது. சுமார் 1.15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த கேளிக்கை விடுதியில், ஓட்டல், மதுபான பார், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கேளிக்கை விடுதியில் தினமும் இரவு நேரத்தில் இன்னிசை கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒரு நபருக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள மதுபான விடுதியில் ஒரு மேஜையை முன்பதிவு செய்ய ரூ.10,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த கேளிக்கை விடுதிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வந்து தங்கிச் செல்கின்றனர்
இந்த நிலையில், இந்த விடுதியில், கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 6ந்தேதி) அன்று இரவு வழக்கம்போல ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. நள்ளிரவில் மெல்லிசைக் குழுவினர் பாலிவுட் பாடல்களை இசைக்க, இளம்பெண் ஒருவர் நடனமாடிக் கொண்டிருந்தார். சுற்றுலா பயணிகள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் நிகழ்ச்சிகளை ரசித்தபடி இருந்தனர்.

அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் விடுதியின் சமையல் கூடத்தில் காஸ் சிலிண்டர்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் பல பகுதிகளில் தீ பரவி மளமளவென எரியத்தொடங்கியது. மேலும் இசை கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்த மேடை அருகேயும் தீ பரவியது. இதனால், அதிர்ச்சி அடைந்த இசைக் குழுவினர், நடனப் பெண், பார்வையாளர்கள் சிதறி ஓடினர். விடுதியின் பல்வேறு பகுதிகளில் இருந்தவர்களும் நுழைவுவாயிலை நோக்கி பீதியுடன் ஓடினர். பலர் மது மயக்கத்தில் தள்ளாடி தள்ளாடி சென்றனர். அவர்களால் ஒரே நேரத்தில் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் இந்தவிடுதியில் அவசர கால வழி போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. விடுதியின் நுழைவுவாயில்கள் குறுகலாக இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதற்குள், விடுதி முழுவதும் தீ பரவி வானளாவிய உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவ்ததின்போது, விடுதி ஊழியர்கள் 14 பேர் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கோவாவின் தீவுப் பகுதியில் உள்ள இந்த விடுதிக்கு செல்லும் பாதை குறுகலாக இருந்ததால், அங்கு உன்யிதாக தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டது. இதனால் உடனடியாக தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவும் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விடுதியில் போதிய தீயணைப்பு வசதிகள் இல்லாததாலும், நுழைவுவாயில்கள் குறுகலாக இருந்ததாலும் அதிக உயிரிழப்பு நேரிட்டுள்ளது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் விரைந்து வந்து, தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அரை மணி நேரத்துக்குள் தீ அணைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படும். விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும்’’ என்றார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உட்பட பல்வேறு தலைவர்களும் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை பிரதமர் மோடி நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தீ விபத்து குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து நிகழ்ந்த பிர்ச் பை ரோமியோ லேன் கேளிக்கை விடுதியில் தரைக்கு கீழே சமையல் கூடம் செயல்பட்டு வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக அங்குள்ள காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில், சமையல் கூடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் சிலிண்டர் வெடித்து தீ பிரவியதால், அங்கிருந்த மரத்தால் வேலைப்பாடுகளுடன் இருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் விடுதியின் மேற்கூரை மீது தீ வேகமாக பரவி, கரும் புகை சூழ்ந்தது. இதில் பலர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில், கேளிக்கை விடுதியின் கேளிக்கை விடுதியின் பொது மேலாளர் மற்றும் ஓட்டல், மதுபான பார், நுழைவுவாயில் பிரிவுகளின் மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர். விடுதி உரிமையாளர்கள் கவுரவ் லூத்ரா, சவுரப் லூத்ரா தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் ரோஷன், விதிகளை மீறி கேளிக்கை விடுதிக்கு பல்வேறு அனுமதிகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.