கான்பெரா

ரும் மே மாதம் 3 ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெறும், ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் கவர்னர் சாம் மாஸ்டினை பிரதமர் அந்தோணி அல்பனீஸ் நேரில் சென்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தல் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் வீட்டுவசதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் ஆளும் கட்சிக்கான ஆதரவை பாதிக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023-ம் ஆண்டு உறுதியளித்தார். ஆயினும் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் அணிசேரா எம்.பி.க்கள் முக்கிய பக்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.