தஞ்சை:  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் பகுதியில் இளம்பெண் ஒருவரை இருவர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு,  பாப்பாநாடு அருகே இளம் பெண் ஒருவர் காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுவரை பொதுமக்கள் மத்தியில் நிகழ்ந்துவந்த இதுபோன்ற சம்பவங்கள் தற்போது பள்ளி மாணவிகளுக்கும், ஆசிரியர்கள் உள்பட பல வக்கிரம் பிடித்த நபர்களால் அரங்கேற்றப்படுகிறது. . சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.  இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றன. இதற்கு காரணம்  மாநிலத்தில் நிலவும் போதைக்கலாச்சாரம் என குற்றம் சாட்டப்படுகிறது. இந்த குற்றச் சம்பவங்களை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இவை தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன.

இந்த நிலையில்,  தஞ்சாவூரில் மீண்டும் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில்  சம்பவத்தன்று பெண் ஒருவர் பேருந்தை விட்டு இறங்கி நடந்து அருகே உள்ள தனது ஊருக்கு  சென்றிருக்கிறார். அப்போது அவரை பின்தொடர்ந்த  அடையாளம் தெரியாத நபர்கள் அந்த பெண்ணிற்கு லிஃப்ட் கொடுப்பது போல் பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்தார்.  இதனைத் தொடர்ந்து போலீசார் இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் பகுதியில், போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.