புதுடில்லி: அயோத்தியில் ராம ஜன்மபூமி கோயில் கட்டுவதற்கு நிதி ஏதும் திரட்டவில்லை என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) இன்று தெளிவுபடுத்தியது.

வி.எச்.பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் இன்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார், ” விஸ்வ இந்து பரிஷத் ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயிலுக்காக எந்த நிதியையும் திரட்டவில்லை என்று தெளிவுபடுத்தியது. பகவான் ஸ்ரீ ராமின் பிறப்பிடத்தில் உள்ள கோயிலுக்கு நிதி சேகரிப்பதற்காக 1989 முதல் வி.எச்.பி அல்லது ஸ்ரீ ராம் ஜம்பூமி நியாஸ் எந்த அறிவிப்பும் வெளியிடவோ, அல்லது நிதியை திரட்டவோ இல்லை என்று வி.எச்.பி யின் சர்வதேச பொதுச்செயலாளர் மிலிந்த் பராண்டே தனது அறிக்கையில் கூறினார்.

தற்போதைய காலத்திலும், வி.எச்.பி அல்லது ஸ்ரீ ராம் ஜம்பூமி நியாஸ் அத்தகைய முறையீடு செய்யவோ அல்லது நிதி திரட்டவோ இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

நவம்பர் 9 ம் தேதி, ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் நிலத் தகராறு தொடர்பான ஒரு முக்கிய தீர்ப்பில், ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தை ஒப்படைக்கவும், இந்த நோக்கத்திற்காக ஒரு அறக்கட்டளை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஏற்ற நிலத்தை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் ஐந்து நீதிபதிகள், எஸ்.ஏ. போப்டே, டி.ஒய். சந்திரசூட். அசோக் பூஷண் மற்றும் எஸ். அப்துல் நஸீர் அடங்கிய அரசியலமைப்பு பெஞ்ச், பிரச்சினைக்குரிய அந்த இடத்தை ராம்லல்லா விராஜ்மான், சன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் நிர்மோஹி அகாரா ஆகியோரிடையே மூன்று பாகமாக பிரித்துத் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகப் போடப்பட்ட  மனுக்களின் மேல் இந்த  உத்தரவைப் பிறப்பித்தது.