சென்னை

சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறைகளையொட்டி இன்று முதல் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மக்கள் தொடர் விடுமுறைகள் மற்றும் பண்டிகை காலங்களின் போது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தற்போது சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்ப்பில்

“சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினமும் இயக்கப்படும் பேரூந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) 470 பேருந்துகளும் , நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மற்றும் சனிக்கிழமை 365 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) 70 பேருந்துகளும், நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) மற்றும் சனிக்கிழமை 65 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் , மாதவரத்திலிருந்து இன்று , வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் 20 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 1,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்”.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.