சென்னை: ஜனவரி14 பொங்கல் திருநாள் முதல் “முதல்வர் மருந்தகம் திட்டம்” தொடங்கப்படும் என்றும், தியாகிகள்  மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாகவும்  முதலமைச்சர் ஸ்டாலின் தனது  சுதந்திர தின உரையில்  அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்தியஅரசு சார்பில் ஏற்கனவே ஜெனரிக் மெடிசின் எனப்படும் மக்கள் மருந்தகம் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இங்கு மிக்குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ள நிலையில், அதுபோல தமிழ்நாடு அரசும் முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்க முடிவு செய்துள்ளது.

நாட்டின் 78வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றி சுத்நதிர தின உரை ஆற்றினார். அப்போது,  2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஜனவரி 14 பொங்கல் திருநாள் முதல் “முதல்வர் மருந்தகம் திட்டம்” தொடங்கப்படும் என்றும் கூறினார்.

“ நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். விடுதலையை பாடுபட்டு பெற்றுத்தந்த தியாகிகளை போற்றுவோம். அவர்கள் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்போம். எந்த நோக்கத்திற்காக அவர்கள் போராடினார்களோ அதற்காக எந்நாளும் உழைப்போம் என்று உறுதியேற்போம். இந்த விடுதலை எளிதாக கிடைத்த விடுதலை அல்ல. 300 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கிடைத்த சுதந்திரம் இது.

ரத்தத்ததையே வியர்வையாக தந்து தங்கள் உடலையே விடுதலை களத்திற்கு உணவாக தந்து எண்ணற்ற தியாகிகள் நம் இந்திய மண்ணில் உண்டு. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் உண்டு. மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத்தந்தவர் கருணாநிதி. 4வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை  அடைகிறேன்.

நமது பன்முகத்தன்மையின் அடையாளம் தேசிய மூவர்ண கொடி. எந்த மாநிலமும் செய்யாத வகையில் அனைத்து தியாகிகளையும் போற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. சமூக நீதி, சமத்துவம், மொழிப்பற்று ஆகிய கருத்தியலின் அடித்தளத்தில்  செயல்படும் இயக்கம்தான் தி.மு.க.  தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி நாம் வளர்த்து வருகிறோம்.

 “மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு”

ஆக.15 ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள் மட்டுமல்ல ஆனந்த இந்தியாவை உருவாக்கும் திட்டம் வகுக்கும் நாளாகும்.

வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமில்லாமல் சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.   சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்து திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது.

நேதாஜியின் இ்ந்திய விடுதலை படையில் கரம் கோர்த்தவர்கள்தான் தமிழர்கள். 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்

கடந்த மூன்று ஆண்டுகளில் பல துறைகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வருகிற பொங்கல் திருநாள் முதல் முதல்வர் மருந்தகம் திட்டம் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் உருவாக்கப்பட இருக்கிறது.

ஓய்வுபெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

கட்டபொம்மன், வ.உ.சி., மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படுகிறது.

நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து பல்துறை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும் என்று கூறினார்.