சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்த  மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த. முருகேசன் தலைமையில்  குழு தனது அறிக்கையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.

தமிழகத்திற்கென பிரத்யேக கல்வி கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்தார். இதற்கென டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு கல்வியாளர்கள், ஆசிரியர்கள்‌, மாணவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளை பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை சமர்ப்பித்தது.

மாநில கல்விக்கொள்கை  பரிந்துரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்கறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (1.7.2024) தலைமைச் செயலகத்தில், மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த. முருகேசன்  தலைமையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையினை சமர்ப்பித்தது.

2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் த.முருகேசன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அக்குழு இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தனது அறிக்கையினை சமர்ப்பித்தது.

மாநில கல்விக் கொள்கை : தமிழ் மொழி முதல் நீட் வரை… முன்னாள் நீதிபதி முருகேசன் பரிந்துரைகள் என்னென்ன?
தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்கள் :

* பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம். தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்குதல்.

* இருமொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.

* 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் இருக்கக்கூடாது.

* கல்வி மாநில பட்டியலில் வரவேண்டும்.

* 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும்.

* கல்லூரி சேர்க்கையின்போது 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுடன் 11ஆம் வகுப்பு மதிப்பெண்களும் இடம்பெற வேண்டும்.

* சிபிஎஸ்இ, Deemed University ஆகியவற்றிக்கான கட்டணங்களை சீரமைப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.

* ஸ்போக்கன் இங்கிலீஷ்” தவிர “ஸ்போக்கன் தமிழ்” மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.

* நீட் தேர்வு இருக்கக்கூடாது.

* நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப் படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

மாநில கல்விக் கொள்கை : தமிழ் மொழி முதல் நீட் வரை… முன்னாள் நீதிபதி முருகேசன் பரிந்துரைகள் என்னென்ன?
* அங்கன்வாடி மையங்களுக்கு ‘தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்’ என பெயரிட வேண்டும்.

* எம்ஜிஆர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்களாக அமைக்க வேண்டும்.

* 5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும்

* தமிழ் பல்கலைக்கழகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும்.

* தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரிகள் தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

* கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

* இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

* போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஆட்சியர் தலைமையில், 1 மனநல ஆலோசகர், 1சுகாதார அதிகாரி, 1 போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 1 உறுப்பினர் ஆகியோரைக் கொண்ட தனிக் குழு அமைக்கலாம்.

* தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.