சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா  வைரஸ் உறுமாறிய நிலையில், மீண்டும் பரவத்தொடங்கி உள்ளது. கேரளா, கர்நாடகாவில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.  தொடர்ந்து தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில்  தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பொது இடங்களில் மாஸ்க் அணிவது நல்லது என மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், தற்போது  2வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.