சென்னை: அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் ஒரு பேராசிரியர் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றி வருவதாக ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம்  குற்றம் சாட்டிய நிலையில்,அதை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக ஆளுநர் அர்.என்.ரவி  அண்ணா பல்கலைக்கழகத்திடம் அறிக்கை கோரியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக போலி கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த மோசடி தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஒப்புக்கொண்டதுடன், இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி  அண்ணா பல்கலைக்கழகத்திடம், அறிக்கை கேட்டுள்ளார். அதுபோல, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமமும் இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம்  விளக்கம் கேட்டுள்ளது.

கடந்த ஜூலை 23 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அறப்போர் இயக்கம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், நிர்வாகி எம்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 480 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த கல்வி ஆண்டில் (2023-2024) அக்கல்லூரிகளில் 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பது ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 175 பேர் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் என்ற பகுதியில் ஒவ்வொரு கல்லூரியிலும் பணிபுரியும் பேராசிரியர்களின் விவரங்களைக் காணலாம். ஒரு பேராசிரியர் 13 கல்லூரிகளில் பணியில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த முறைகேட்டால் மாணவர்களுக்கு தரமான பொறியியல் கல்வி கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் உண்மையில் பணியாற்றுகிறாரா அல்லது ஆய்வு நேரத்தில் வேறு கல்லூரியில் இருந்து பேராசிரியர் கொண்டுவரப்பட்டுள்ளாரா என்பதை ஊதிய விவரம், இ.பி.எஃப் தகவல், அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ) அடையாள எண் ஆகியவற்றைக் கொண்டு எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோருக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செயலர் லட்சுமிநாராயண் மிஸ்ரா, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் தலைவர் சீதாராம் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நினைத்தால் இந்த முறைகேட்டை ஒரே வாரத்தில் உறுதிப்படுத்தி சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். கல்லூரிகளில் பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழுநேர பேராசிரியராகப் பணியாற்ற முடியாது. கவுரவப் பேராசிரியராக இருந்தால்கூட 2 கல்லூரிகளில் மட்டுமே பணிபுரிய முடியும். எனவே, முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த 353 பேராசிரியர்களையும் விசாரித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறப்போர் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், “அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் இருக்க கூடிய இணைப்புக் கல்லூரிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது உண்மைதான். அதற்காக முறைகேடுகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கு குழு ஒன்றை அமைத்துள்ளோம். 189 பேராசிரியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரே பேராசிரியர் தன்னுடைய ஆதார் எண்ணை மாற்றி சுமார் 32 கல்லூரிகளில் பணிக்கு சேர்ந்து அதன்மூலம் வருவார் ஈட்டியுள்ளார். மொத்தமாக 50 கல்லூரிகள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சம்பந்தபட்ட கல்லூரிகள் மீது, பேராசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், நடப்பு ஆண்டில் 124 கல்லூரிகளில் 500க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போலியாக பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தமிழக அரசு பிரதிநிதி அடங்கிய விசாரணைக் குழுவை அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்தக் குழு சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மற்றும் பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தும். விசாரணைக்குப் பின்னர் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், பேராசிரியர்கள் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் வாழ்நாள் முழுவதும் பணியாற்ற தடை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டுள்ளார். இந்த முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

மறுபுறம், அண்ணா பல்கலைக்கழகத்திடம் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமமும் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் போலியாக முழுநேரம் பணியாற்றும் பேராசிரியர்கள்! அண்ணா பல்கலைக்கழக ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் தகவல்…

முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான்: அறப்போர் இயக்க குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட துணைவேந்தர் வேல்ராஜ்…