டெல்லி: வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதிபெற்று வந்த 20ஆயிரம் என்ஜிஓக்களின் லைசென்ஸ் கடந்த 10 ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள பதிலில்,  வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் (எஃப்.சி.ஆர்.ஏ), 2010 இன் பல்வேறு விதிமுறைகளை மீறியமை மற்றும் அதனுடன் செய்யப்பட்ட விதிகளை மீறி  செயல்பட்டு வந்த என்ஜிஓக்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2011 முதல் இன்றுவரை சுமார் 10 ஆண்டுகளில்,  20,600 க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) மற்றும் சங்கங்களின் வெளிநாட்டு நிதி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள், வருடாந்திர வருமானத்தை தாக்கல் செய்யத் தவறியதால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகவும்,  2018 முதல் 2020 வரையிலான கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும்  1,810 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவு ரத்து செய்யப்பட்டதாக ஜூனியர் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் உறுப்பினரின்  கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும், 2020 ஆம் ஆண்டில் மட்டும் 463 என்ஜிஓக்களும், 2016 முதல் 8,353 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எஃப்.சி.ஆர்.ஏ சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படவில்லை. எஃப்.சி.ஆர்.ஏ இன் 13 வது பிரிவின் கீழ் 25 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் கடந்த ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்டன, இது 2019 ல் ஐந்து ஆக இருந்தது, ஆனால் 2018 ல் 233 க்கும் குறைவாகவே உள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.