கோவை:  பள்ளி மாணவிகள் 9 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது  செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்த தகவல் தெரிந்தும், அதிகாரிகளிடம்  புகார் அளிக்காமல் ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்ட அதே பள்ளியைச் சேர்ந்த 4 ஆசிரியைககள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவிகள் 12 பேர் பாலியல் துன்புறுப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது கோவையிலும் அதுபோல ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இததொடர்பான புகாரின் பேரில்,  மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில், உடந்தையாக இருந்த நான்கு பெண் ஆசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பு அரசு பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். அப்போது அந்தப் பள்ளியில் 7, 8, 9 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் 9 பேர் அவர்களிடம் பள்ளியில் 7 வது மற்றும் 8 வது வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர் நடராஜன் (54) என்பவர், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இது குறித்து வகுப்பு ஆசிரியரான கீதா மற்றும் ஷியாமளா உள்ளிட்டோரிடம் அப்போதே தெரிவித்ததாகவும், அதனை அறிந்தும் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனா, பட்டதாரி ஆசிரியை சண்முகவடிவு உள்ளிட்டோர் அதனை மூடி மறைக்கும் வகையில் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக மாணவிகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக காவல் நிலையத்திலும், குழந்தைகள் நல அதிகாரிகளிடமும் அவர்கள் புகார் அளிக்காமல் இருந்து வந்ததாகவும், ஆசிரியர் நடராஜன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அப்பள்ளியில் பயிலும் 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் தொந்தரவு செய்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனா, ஆசிரியைகள் சண்முகவடிவு, கீதா, ஷியாமளா ஆகியோர் இச்சம்பவத்தை போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரிய வந்தது.

இதனை அடுத்து பள்ளி மாணவிகள் 9 பேரை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் நடராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜமுனா, ஆசிரியைகள் கீதா, ஷியாமளா, சண்முகவடிவு ஆகியோர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.