சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கு இதுவரை 18,564 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது, இந்த விஷயத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொய் கூறியிருக்கிறார், அவரது கூற்று தவறு என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

கோவையில் ஜிஎஸ்டி தொடர்பாக வணிக நிறுவன தலைவர்களுடன் கலந்துரையாடிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட பணிகள் தொடர்பான கருத்துகளை தெரிவித்திருந்தார்.

அப்போது, சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டம் மாநில அரசின் திட்டம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என கூறியதுன்,  இந்த திட்டத்தை மாநில அரசு ஒரு மாநிலத் துறை திட்டமாகவே முன்மொழிந்துள்ளது எனக் கூறினார். மேலும் இதற்கான மொத்த செலவில் 10 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும் என்று கூறியயதுடன், திட்டத்திற்கான மொத்த செலவான ரூ.63,246 கோடியில், மாநில அரசு ரூ.22,228 கோடியையும், பொது முதலீட்டு வாரியம் மூலம் ரூ.7,425 கோடி மத்திய அரசிடமிருந்தும் பெறப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு பல மற்றும் இருதரப்பு வெளி மேம்பாட்டு முகமைகள் மூலம் கூடுதலாக ரூ.33,593 கோடி பெறப்பட்டுள்ளது என்றார்.

மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம், 54 கிமீ தூரத்தை கடந்து, மத்திய துறை திட்டமாக தொடங்கப்பட்டது.செலவில் 60% வெளிநாட்டு கடன்களால் ஈடுசெய்யப்பட்டது.118 கிமீ வரையிலான நீட்டிப்பிற்கான இரண்டாம் கட்டத் திட்டம் மாநில அரசின் கோரிக்கையின்படி 2018 மற்றும் 2023க்கு இடையில் ரூ.21,560 கோடி கடன் பெறப்பட்டதாக   கூறினார்.

மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்று மாநில அரசு குற்றம் சாட்டியதற்கு அதிருப்தி தெரிவித்த அவர், தேவையான கடனை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அந்த நிதியில் வெறும் 27 சதவீதத்தை (ரூ.5880 கோடி) மட்டுமே மாநில அரசு பயன்படுத்தியதாகக் கூறினார்.

இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் பொய் சொல்கிறார், அவர் கூறுவது தவறு என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கு இதுவரை 18,564 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்துக்கு  உரிய நிதி பங்களிப்பினை வழங்கிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், கோவையில் நேற்று முன்தினம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை மெட்ரோ ரயில்-II திட்டத்திற்கு ரூ.21,000 கோடி கடனுதவியை ஒன்றிய அரசு பெற்றுத் தந்தது, அதில் ரூ.5,880 கோடி மட்டுமே தமிழ்நாடு அரசு செலவு மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை. மெட்ரோ ரயில் இத்திட்டத்தின் 2-வது கட்டம் ஏப்ரல் 2017-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக 3 வழித்தடங்களுடன் 119 கி.மீ. நீளத்திலான மெட்ரோ ரயில் திட்டம் குறித்த ஒரு விரிவான திட்ட அறிக்கையை மாநில மற்றும் ஒன்றிய அரசின் 50:50 என்ற சமபங்களிப்பு அடிப்படையில் ஜனவரி 2019-ல் பரிந்துரை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகளின் அளவுகோலுக்கான அறிக்கையின் அடிப்படையில் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் கட்டத்தின் திட்ட மதிப்பீடு ரூ.63,246 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஒன்றிய நிதியமைச்சர் சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-II, மாநில பிரிவு திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்த சரியான விவரத்தை அவருக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 2017ம் ஆண்டு இத்திட்டத்தை ஒரு ஒன்றிய திட்டமாகவே நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசால் பரிந்துரை செய்யப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் ஜப்பான் நாட்டின் நிதி வழங்கும் ஜெஐசிஏ நிறுவனம் 2018ம் ஆண்டு இத்திட்டத்தினை விரைந்து துவக்க கடன் ஒப்பந்தத்தை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், கடன் ஒப்பந்தத்தை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில், காலதாமதத்தை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசே இம்மாபெரும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது. ஒன்றிய நிதி அமைச்சரை நாங்கள் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றிய அரசின் பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்தபடி சென்னை மெட்ரோ ரயிலின் 2-வது கட்ட திட்டத்தினை, ஒன்றிய அரசின் பங்களிப்பு திட்டமாக அங்கீகரித்து ஒன்றிய அரசின் பங்கான ரூ.7,425 கோடியினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதேயாகும். உண்மையில் இதுவரை இத்திட்டத்திற்காக ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு அரசு இதுவரை தனது சொந்த நிதியிலிருந்து செலவிட்டுள்ள தொகை ரூ.11,762 கோடியாகும். வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ.6,802 கோடியாகும். ஆனால் ஒன்றிய அரசின் பங்கான பொது முதலீட்டுக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கான ரூ.7,425 கோடியில் ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாடு எவ்வாறு வஞ்சிக்கப்படுகிறது என்பதை இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது ஒன்றிய நிதியமைச்சர் இந்தியாவில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து பேசும்போது கொச்சி, சென்னை, பெங்களூர், நாக்பூர் மற்றும் நாசிக் ஆகிய 5 நகரங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பின்பு பெங்களுருக்கு ரூ.30,399 கோடி, கொச்சி நகரத்திற்கு ரூ.1957 கோடி, நாக்பூர் நகரத்திற்கு ரூ.6708 கோடி, பூனே நகரத்திற்கு ரூ.910 கோடி, தானே நகரத்திற்கு ரூ.12,200 கோடி மதிப்பீடு கொண்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு பங்களிப்பு திட்ட அடிப்படையிலேயே ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால் இதுவரை சென்னைக்கு எவ்வித நிதி ஒதுக்கீடும் ஒன்றிய அரசு செய்யவில்லை. தமிழ்நாடு ஏன் மாற்றாந்தாய் பிள்ளையாக நடத்தப்படுகிறது? அரசியல் காரணங்களுக்காக பொது மக்கள் பாதிக்கப்படும் வகையில் திட்டங்களை தொய்வுப்படுத்தவும், மாநில அரசிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்யப்படுகிறதோ என்று நமக்கு ஐயம் ஏற்படுகிறது. எனவே தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கைளை ஏற்று ஏற்கனவே பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளபடி தனது பங்கான ரூ.7,425 கோடியை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.