ஸ்ரீநகர்,

காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள தப் பனாசா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு கட்டிடம்  தீடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த கட்டிடத்தில் வேலை செய்துவந்த பணியாட்கள் சிக்கிகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மீட்புப்பணிகளை தொடங்கினர்.

இடிபாடுகளில் இருந்து 13 பேரை போலீசார் மீட்டனர். அதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்னும் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.