சென்னை: மாநில வளர்ச்சி கொள்கை குழுவினர் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர், சென்னை கடற்கரை அருகே உள்ள தமிழகஅரசு கட்டிடமான எழிலகத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக அரசால் மாநில வளர்ச்சி கொள்கை குழு அமைக்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுபதவி ஏற்றது முதல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மாநில திட்டக் குழுவானது, ‘மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக’ மறுசீரமைப்பு செய்யப்படுவதாக கடந்த 23.04.2020ந்தேதி அன்று தமிழகஅரசுஅறிவித்தது.
அதன்படி, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும்; பேராசிரியர். ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர்கள் ம. விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.தீனபந்து, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த குழுவுக்கு, இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று தலைமைச்செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மாநில வளர்ச்சி கொள்கை குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையை தொடர்ந்து, துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் குழு ஆய்வு கூட்டம்சென்னை எழிலகத்தில் முதல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு புதிய துறைகளை ஒதுக்கீடு விவரம்:
பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் – விவசாயம் கொள்கை மற்றும் திட்டமிடுதல்
பேராசிரியர் ஆர்.இராம. சீனுவாசன் – திட்ட ஒருங்கிணைப்பு
பேராசிரியர் – எம்.விஜயபாஸ்கர் – கல்வி மற்றும் வேலை வாய்ப்பு
பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் – விவசாய நிலம் பயன்படுத்துதல்
மு. தீனபந்து – இ.ஆ.ப. (ஓய்வு) – ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட திட்டமிடுதல்
டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் – விவசாய கொள்கை மற்றும் திட்டமிடுதல்
மல்லிகா சீனிவாசன் – தொழிற்சாலைகள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து
மருத்துவர் அமலோற்பவநாதன் – சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை
சித்த மருத்துவர் சிவராமன் – சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை
முனைவர் நர்த்தகி நடராஜ் – சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை
“தமிழகத்தில், மாநில திட்டக் குழு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதலமைச்சரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.