டெல்லி: டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து, காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 காவல்துறையினர் உள்பட ஒரு விவசாயியும் பலியான நிலையில், பலர் காயமடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து விவசாயிகள் போராட்டம் 2 நாள் நிறுத்தி வைக்கப்படுவதாகஅறிவித்த விவசாய சங்கத்தினர், தற்போது வரும் 29ந்தேதி வரை  தற்காலிகமாக போராட்டத்த  நிறுத்தி வைப்பதாக அறிவித்து உள்ளனர். அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அடுத்த வாரம் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் விவசாய சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை தரப்படுவதை சட்டப்பூர்வமாக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கடந்த 13 ஆம் தேதி முதல் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப்-ஹரியானா எல்லையான கனோரியில் தடுப்புகளை நோக்கி விவசாயிகள் முன்னேறி வந்தநிலையில் பல முறை கண்ணீர் புகைக்குண்டுகளை காவல்துறை வீசியது. இதில் பஞ்சாப் மாநிலம் பதின்டாவை சேர்ந்த 21 வயதான விவசாயி உப்கரண் சிங் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகள், காவல்துறையினர் இடையே நடந்த மோதலில், காவலர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  12 பேரும், விவசாயிகள் பலரும் காயமடைந்தனர்.

இதனிடையே டெல்லியை முற்றுகையிடும் பேரணி 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்கங்களின் தலைவர்களில் ஒருவரான சர்வான் சிங் சந்தேர் தெரிவித்திருந்தார். இதனிடையே போராட்ட களத்தில் காவல்துறை நடத்திய தாக்குதலில் விவசாயி உயிரிழந்துள்ளது வேதனை அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

இந்த நிலையில், விவசாயிகளை அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து போராட்டத்தை வரும் 29ந்தேதி வரை ஒத்தி வைப்பதாக விவசாய சங்கத்தினர்  அறிவித்து உள்ளனர். அடுத்த நடவடிக்கை இயக்கத்தின் தலைவர்களால் தீர்மானிக்கப்படும் என்று விவசாயி தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார். போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முட்டுக்கட்டை நீடிப்பதால் இந்த தகவல் வெளியாகி உள்ளது.