டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு  நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில்,  போலி வாக்காளர் ஒடிசாவில் பெண்கள் பாதுகாப்பு, அமெரிக்காவுக்கு வரிகுறைப்பு குறித்து அவையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க கோரி  மக்களவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ப் 10ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள்,  மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசி அமளியில் ஈடுபட்டனர். இதனால், மத்திய அமைச்சர் பிரதான், திமுக எம்.பி.க்கள் அநாகரிகமானவர்கள் என காட்டமாக விமர்சித்தார். இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,  மத்தியஅமைச்சர் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடரில்,  குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 (Immigration and Foreigners Bill 2025) தாக்கல் செய்யப்பட உள்ளது. துறை அமைச்சர், இந்த திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், ஒடிசாவில் பெண்கள் பாதுகாப்பு பிரச்சினை குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. சப்தகிரி சங்கர் உலகா ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

அதுபோல, அமெரிக்காவுக்கு வரி குறைப்பதாக பிரதமர் மோடி  கூறியதாக,  அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து,   வெளிப்புற அழுத்தத்தின் கீழ் இந்தியாவால் கட்டணங்களைக் குறைப்பதாகக் கூறப்படுவது குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், லோக்சபாவில், போலி வாக்காளர் பிரச்னை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்தார்.