ரஷ்யா, ஜப்பானில்  இன்று காலை 8.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு  சுனாமி ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்தியர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரஷ்யா மற்றும் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின. இதுதொடர்பான வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.

ரஷ்ய கிழக்கு பகுதியில் 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பூமிக்கு அடியில் 19 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள், கட்டடங்கள் குலுகியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரஷ்யாவின் செவெரோ-குரில்ஸ்க் மற்றும் வடக்கு ஜப்பானின் கரைகளை சுனாமி தாக்கத் தொடங்கியது. 3 மீட்டர் வரை கடல் அலைகள் எழுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட செய்தியில், அவச்சா என்ற கடலோர நகரத்தில், கம்சாத்ஸ்கை நகரில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 125 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும், பின்னர் அது 8.0 என திருத்தி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகியுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் தீவிர சுனாமி அலைகள் எழும்ப கூடும் என அமெரிக்காவும் எச்சரித்துள்ளது.

இதனால், பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்ப கூடும். தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானில் ஓரடிக்கு மேல் உயரத்தில் அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கம் 1952 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் வலிமையானது, அதிகாரிகள் “வலுவான பின்அதிர்வுகள்” ஏற்படும் என்று எச்சரித்தனர். “7.5 வரையிலான குறிப்பிடத்தக்க, குறிப்பிடத்தக்க பின்அதிர்வுகள் குறைந்தது இன்னும் ஒரு மாதத்திற்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று ரஷ்ய அறிவியல் அகாடமியின் புவி இயற்பியல் சேவையின் கம்சட்கா கிளை எச்சரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் தீபகற்பம் ஏற்கனவே தொடர்ச்சியான நிலநடுக்கங்களால் அதிர்ந்துள்ளது. ஜூலை 20 ஆம் தேதி, கம்சட்காவின் தலைநகர் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கிக்கு அருகில் 7.4 ரிக்டர் அளவிலான ஒன்று உட்பட ஐந்து நிலநடுக்கங்களின் தொடரைப் பதிவு செய்தது.

சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்காணித்து வருகிறது.

அமெரிக்க அவசரநிலை மேலாண்மை மையத்தின் எச்சரிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும்.சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தின் +1-415-483-6629 என்ற உதவி எண்ணை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.