சென்னை: திருவள்ளுவா் விருது உள்பட 73 விருதுகளுக்கு தகுதியான அறிஞர்கள் விண்ணப்பிக்கலாம் என  தமிழ்சாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  விண்ணப்பங்களை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,   தமிழ்மொழி, பண்பாட்டு வளா்ச்சிக்கும் தொண்டாற்றுபவா்களுக்கும், தமிழக அரசு விருது வழங்கி வருகிறது. அடுத்த ஆண்டுக்கான (2025) திருவள்ளுவா் விருதுக்கும், நிகழாண்டுக்கான (2024) மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது உள்ளிட்ட 72 விருதுகளுக்கும் தகைமையும் தொண்டறமும் பூண்ட தமிழறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழறிஞா்கள் www.tamilvalarchithurai.in/awards,  http:// awards.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ‘தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600008’ என்ற முகவரிக்கு ஆக. 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். உரிய ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது. தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகங்களின் வாயிலாக விண்ணப்பிக்கப்பட வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044- 28190412, 044- 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.