டில்லி:

தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து செய்தி வெளியிட வைத்த புகாரின் அடிப்படையில் மத்திய பிரதேச மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2009 சட்டசபை தேர்தலின் போது மிஸ்ரா பணம் கொடுத்து செய்தி வெளியிட செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர பார்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. தேர்தல் ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து மிஸ்ரா சார்பில் உயர் மற்றும் உச்சநீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 7 (பி) அடிப்படையில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதற்காக மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அவரால் போட்டி போட முடியாது. அது மட்டுமல்ல… தற்போது அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலும் தொடர முடியாது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக நரோட்டம் மிஸ்ரா கூறியுள்ளார்.