சென்னை

திமுக எம் பி கதிர் ஆன்ந்திடம் அமலாக்கத்துறையினர் 10 மணி நேரம் விசாரணை  நடத்தி உள்ளனர்.

வேலூரில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட\போது அவர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி போன்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போது சோதனை நடத்தினார்கள்.

மேலும் துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களிலும் ந்டத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.11 கோடியே 51 லட்சம் பணம் சிக்கியதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

காட்பாடி காவல் நிலையத்தில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. சமீபத்தில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், ரூ.75 லட்சம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி அமலாக்கத்துறை வட்டாரத்தில் தகவல் வெளியானது. நேற்றி கதிர் ஆனந்த் எம்.பி.யை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரான தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அடுக்கடுக்கான கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்ததாகவும், அந்த கேள்விகள் அனைத்திற்கும் கதிர் ஆனந்த் எம்.பி. பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் விசாரணையின் முழுமையான விவரங்களை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.