டெல்லி: சமீபத்தில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த பாஜக கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், நாளை  தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளது.  தலைநகர் டெல்லியில் நாளை காலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   டெல்லியில் நாளை காலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும்,  இந்த கூட்டத்தில் டெல்லியில் இருக்கும் பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக கலந்துகொள்ள வேண்டும் என்றும், டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் காணொளி வாயிலாக பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்த 30 சட்டப்பேரவைத் தொகுதிகள், 3 மக்களவைத் தொகுதிகளில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு செய்யவும், அடுத்தஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.