டெல்லி: செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ (ai)., ஆடியோ, புகைப்படங்களைக்கொண்டு தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு ECI அறிவுரை  கூறியுள்ளது. தேர்தல்  பிரச்சாரத்தில் AI-ஐப் பயன்படுத்துவதில் பொறுப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் இருங்கள் என அறிவுறுத்தி உள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி  நடைபெற உள்ளது.  இதைத்தொடர்ந்து அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் களமிறங்கி உள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆம்ஆத்மி கட்சி முயள்சித்து வருகிறது. இதனால், அங்கு  மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கு அனல்பறக்கும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு கட்சியை மற்றொரு கட்சி குற்றம் சாட்டி, வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் புணையப்பட்டதாகவே உள்ளது. இதனால் சர்ச்சைகள் எழுந்துள்ளது.

சமீபத்தில்,  பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் முகங்களை மாற்றி, உரையாடல்களும் மாற்றப்பட்டு  கடந்த 1990-களில் வெளியான பாலிவுட் திரைப்படத்தின் வீடியோவை ஆம் ஆத்மி கட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மாற்றி பிரச்சாரம் செய்தது. அந்த ஏஐ வீடியோவில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு பதிலாக  பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் பயன்படுத்தப்பட்டு இருந்தது.  இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ, புகைப்படங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து புகார்களை அளித்து வருகின்றன. இந்த சூழலில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன்படி,   செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இவை வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சாரத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சமூக வலைதள பிரச்சாரம் தொடர்பான வழிகாட்டு நெறிகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த வழிகாட்டு நெறிகளை அரசியல் கட்சிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக தவறான தகவல்களை பரப்பும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ, ஆடியோ, புகைப்படங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக்கூடாது.

செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) தயாரான பிரச்சாரங்களை, வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காண, இவை ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். நேர்மை, வெளிப்படைத்தன்மையுடன் தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.