கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு, ஏப்ரல் 12ம் தேதி இரவு 8 மணிமுதல், ஏப்ரல் 13ம் தேதி இரவு 8 மணிவரை, மொத்தம் 24 மணிநேரங்கள், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்துள்ளது தேர்தல் கமிஷன்.

மேற்குவங்க மாநிலத்தில், சர்ச்சைக்குரிய வகையில், எப்போதுமில்லாத வகையில், மொத்தம் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். மோடி அரசின் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

மேற்குவங்க தேர்தல் களம், கடந்த சில மாதங்களாகவே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தனது கட்சி சார்பாக, ஒற்றை ஆளாக களத்தில் சுழன்று வருகிறார் மம்தா பானர்ஜி. பாஜகவோ, தனது முழு பலத்தையும் மேற்கு வங்கத்தில் இறக்கியுள்ளது மற்றும் நிறைய முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, அவதூறாக பேசினார் மம்தா பானர்ஜி என்று தேர்தல் கமிஷனில் புகாரளித்தது பாஜக. இதனையடுத்து, ஏப்ரல் 12ம் தேதி இரவு 8 மணிமுதல், ஏப்ரல் 13ம் தேதி இரவு 8 மணிவரை, மொத்தம் 24 மணிநேரங்கள், பிரச்சாரம் செய்ய மம்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில், 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் 4 கட்ட தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது.