சென்னை
இன்று சென்னையில் நடைபெரும் ஐ பி எல் போட்டியை காண்போர் மாநகர பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கொல்கத்தாவில் 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழாவின் தொடக்க நாளில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதாவது மாலை 4 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் போட்டி இடுகின்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெற உள்ள இந்த போட்டியை காண ரசிகர்கள் பெருமளவில் படையெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஐபிஎல்: சென்னை – மும்பை போட்டியையொட்டி கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை காண்பித்து மாநகரப் பஸ்களில் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த 3 மணி நேரம் வரையும் இலவசமாக பயணிக்கலாம் என்றும் ஒருவர் பல பஸ்களை பயன்படுத்தியும் மைதானத்திற்கு இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சதுக்கம், சென்னை பல்கலை., ஒமந்தூரார் மருத்துவமனை நிறுத்தங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் கிரிக்கெட் மைதானம் வரை சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களிலும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.