வாஷிங்டன்

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக ஜி 7 மாநாடு வீடியோ கான்பரன்சிங் மூலம்  நடைபெற உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஜி 7 அமைப்பு என்பது கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்துள்ள ஒரு அமைப்பாகும்.  இந்த அமைப்பின் மாநாடு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும்.  ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு உறுப்பு நாடுகளில்  ஜி 7 மாநாடு நடப்பது வழக்கமாகும்.

அவ்வகையில் இந்த ஆண்டு அமெரிக்காவில் ஜி 7 மாநாடு நடைபெறுவதாக இருந்தது.   உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது.  எனவே இந்த மாநாட்டை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக அமெரிக்காவின் கேம்ப் டேவிட் இல் நடக்க இருந்த ஜி 7 மாநாடு ரத்து செய்யப்படுகிறது.   இதனால் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தங்கள் நேரம் மற்றும் ஆற்றலைப் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சுகாதார சவாலை எதிர்கொள்ள பயன்படுத்த முடியும்..

வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த மாநாடு நடைபெற உள்ளது.   இப்போது நடைபெற உள்ளது போல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜி 7 உறுப்பினர்களுடன் டிரம்ப் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாட உள்ளார்.  உறுப்பினர்கள் இதற்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் “ என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.