சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி “போதை பொருள்” கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்மூலம் பயனடைந்த டைரக்டர் அமீர் உள்பட சிலருக்கு தேசிய போதை பொருள் தடுப்பு துறை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.
அதன்படி, இன்று போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் நண்பர் டைரக்டர் அமீர் இன்று என்சிபி அலுவலகத்தில் ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாட்டை உலக்கிய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்பட இயக்குநர் அமீர் உள்பட 3 பேர் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு முன் ஆஜராகி விளக்கம் தரவுள்ளனர்.
ஜாபர் சாதிக் இப்போது தயாரிக்கும் திரைப்படத்தை இயக்குநர் அமீர் தான் இயக்கி வருகிறார். மேலும், அவருடன் இணைந்து ஹோட்டல் மற்றும் சில தொழில்களையும் செய்து வருகிறார். இதனால், அவருக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, அமீர், அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அவர்படி, இவர்கள் மூன்று பேரும் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 2ஆம் தேதி) ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
விசாரணையின் முடிவில் தான் போதைப்பொருள் கடத்தலில் இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரிய வரும்.