சென்னை

போதை மருந்து கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் கைது செய்யப்பட்டு 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.  மேலும் இவர்,
சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத் துறையும் தனியாக
வழக்கு பதிவு செய்து, கைது செய்தது.

நேற்று ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி இருந்தார்.  தீவிர விசாரணைக்கு பின் அவரைஅமலாக்கத்துறை கைது செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் முகமது சலீமை நேரில் ஆஜர்படுத்தினர்.

அமலாகத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை போலி நிறுவனங்கள் துவங்கி அதில் முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும்,சட்டவிரோத பண பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டதற்கான ஆவணங்களைக் கைப்பற்றி
உள்ளதாகவும் தெரிவித்தார்.

முகமது சலீம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காளி சரண், விசாரணைக்கு ஆஜாராகி முழு
ஒத்துழைப்பு அளித்த நிலையில், அவரது கைது தேவையற்றது என்று தெரிவித்தார். இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முகமது சலீமை ஆகஸ்ட் 27ம் தேதி வரை
நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

முகமது சலீமை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள் மனுவிற்கு பதிலளிக்கும்படி முகமது சலீம் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்று ஒத்தி வைத்துள்ளார்.