சென்னை: கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரசார் பேசக்கூடாது என என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தடை விதித்துள்ளார்.

ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி சமீபத்தில் தவெக தலைவர் விஜய்-ஐ சந்தித்து பேசியதுடன், திமுக அரசின் கடல் பட்டியலையும் விமர்சனம் செய்திருந்தார். அதனால், திமுக ஆதரவாளர்களாக உள்ள காங்கிரசார், அவரை கடுமையாக சாடினர். இதற்கு எதிர்வினையும் காங்கிரஸ் கட்சியில் இருந்தே எழுந்தது. இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் சக்ரவர்த்தி, 60 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலையில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு அதிக தொகுதிகள், ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றதுடன், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் திமுக வெற்றிபெற முடியுமா என்றும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்டுக் கோப்பாக உள்ளது. கூட்டணி குறித்து காங்கிரசார் பொதுவெளியில் பேச கூடாது என்று கட்சியினருக்கு செல்வப்பெருந்தகை அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் , கடந்த 2004ல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2024 வரை 2014 ஒரு தேர்தலை தவிர கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் போட்டியிட்டிருக்கின்றன.
இதில் குறிப்பாக 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக, பாஜ உள்ளிட்ட வகுப்புவாத, ஊழல் சக்திகளை தோற்கடித்து தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கிற கூட்டணியாக இந்தியா கூட்டணி திகழ்ந்து வருகிறது.
அதிமுகவை பயன்படுத்தி வகுப்புவாத பாஜ, தமிழ்நாட்டில் காலூன்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சியின் மூலம் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது. சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியபடி, காங்கிரஸ் கட்சி அமைத்த ஐவர் குழுவினர் திமுகவுடன் முதற்கட்டமாக பேசியிருக்கிறார்கள்.
காங்கிரஸ், திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்