உளுந்தூர்பேட்டை:  2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால்தான் மீண்டும் திமுக ஆட்சி என விசிக மதுஒழிப்பு மாநாட்டில், திருமாவளவன் பேசினார். இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற இருப்பதை திருமாவளவன் சூசகமாக பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. திமுக அரசால் ஒருபோதும் மதுவிலக்கை கொண்டு வர முடியாது என்ற நிலையில், திருமாவளவன் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மதுக்கடைகளை மூடினால்தான் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என கூறியிருப்பது, அவர்  கூட்டணி மாற முடிவு செய்துள்ளதை தெளிவுபடுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய விசிக தலைவர் தொல். திருமாவளவன்,  ”நான் உங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். கடந்த மக்களைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை கொடுத்தீர்கள். அதற்காகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இம்மாநாட்டின் சிறப்பே லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்ததுதான். மதுவிலக்கு என்பது நம் புத்தர் காலத்திலிருந்தே பேசப்பட்டு வருகிறது. ஞான வம்சத்தில் இருந்து வந்த நான்  சாதி மத பெருமைகளை  பேசவில்லை.  இதுவரை நாம் பயன்படுத்தாதவர்கள், அதாவது,  மதுவை வேண்டாமென்று சொன்ன காந்தியையும், ராஜாஜியையும் இந்த மாநாட்டில் கௌரவப்படுத்துகிறோம். அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. தமிழ்நாடு உட்பட இந்திய அளவில் மது ஒழிப்பு வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள். சாதி, மத வெறியர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

இந்த மதுஒழிப்பு மாநாடு,  முதலில் செப்டம்பர் 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால்,  அன்று பாமகவின் தியாகிகள் தினம் என்பது தெரிய வந்ததால், இரு நிகழ்வுகளும்  எதிரும் புதிருமாக வரக்கூடாது என்பதால்தான் நாள் மாற்றப்பட்டு அக்டோபர் 2ந்தேதி  தேர்வு செய்யப்பட்டது.

புத்தர் உலகம் முழுவதும் மதுவிலக்கை சொன்னார். இந்த எளியவன் தமிழகத்தில், இந்தியாவில் சொல்கிறேன். எந்த மதமும் மதுவை ஆதரிக்கவில்லை. அரபு நாடுகளில் மதுக்கடைகளை காணமுடியாது.

திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தை எழுதியுள்ளார். உலகம் போற்றும் மகான்கள் யாரும் மதுவை ஆதரிக்கவில்லை. இந்த அடிப்படையில்தான் மதுவை வேண்டாம் என்றோம்.

ஏற்கனவே மதுவிலக்கு தொடர்பாக, கடந்த 2015-ம் ஆண்டு திருச்சியில் மதுவிலக்கு மாநாட்டை நடத்தி, துண்டறிக்கைகளை வெளியிட்டோம்.

மதம் மாறிய அம்பேத்கர் ஏற்றுக்கொண்ட மதுவை தொடமாட்டேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். மதுவுக்கு பெரியார், மார்க்ஸ் அடிமையாகி இருந்தால் அவர்கள் நமக்கு கிடைத்து இருப்பார்களா?

உடனே தமிழகத்தில் மட்டும் திருமாவளவன் மது வேண்டாம் என்கிறார் என்று அரைவேக்காடுகள் கூறுகிறார்கள்.

 மதுவுக்கு அடிமையானால் மனிதவளம் அழியும். இதில் அரசியல் பேசவேண்டாம் என்றேன். உடனே நான் அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தேன் என்றும், கூட்டணி மாறப்போகிறேன் என்று இம்மாநாட்டின் நோக்கத்தை சிதைத்துவிட்டார்கள். நான் இந்தியா முழுவதும் மதுவிலக்கு வேண்டும் என்கிறேன்.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளது. காவிரி, இலங்கை பிரச்சினைக்காக நாம் இணைந்து பேசவில்லையா? அப்படி இதை பேசி இருக்கவேண்டும். அண்ணா மதுவிலக்கை தளர்த்தவில்லை. மதுக்கடைகளை மூட சொல்லி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை வைக்கிறோம்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கான இழப்பீடை மத்திய அரசு தரவேண்டும் என்று கலைஞர் கூறினார். பின்னர் 1974-ம் ஆண்டு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் மதுவிலக்கை தளர்த்தியது யார்? டாஸ்மாக்கை உருவாக்கியது யார்? இதை வாதாடுபவர்கள் என்ன சூழ்ச்சியில் பேசுகிறார்கள் என்பதை சொல்கிறேன்.

தமிழக முதல்வர் ஸ்டாலினா மதுக்கடைகளை திறந்தார் என்றவர் அதற்கு முன்பும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சியிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன என்றவர், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு (2026)  முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்றார்.

அதற்கு முன்  திமுக அரசு சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.  மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அரசியல் வேண்டாம் என்ற நிலையைகூட நான் எடுக்க தயாராக உள்ளேன். ஆளுநர் வருகையால் காந்தி மண்டபத்தில் என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் நான் காந்தியை அவமதித்துவிட்டதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை கூறுகிறார். மதசார்பின்மையை சொன்னதற்காக காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மேடைக்கு வந்த தலைவர்களால் விசிகவின் நோக்கம் மேம்பட்டுள்ளது”

(முன்னதாக, “திருமாவளவன் காந்தியைத் தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மரியாதை செலுத்த சென்றிருக்கிறார். மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று தெரியவில்லை. மது ஒழிப்பை ஆளும் திமுக அரசிடம் வலியுறுத்த முடியவில்லை என்ற குற்ற உணர்வு காரணமா என்பது தெரியவில்லை” என்று தமிழிசை சொந்தரராஜன் விமர்சித்திருந்தார்)

இதற்கு பதில் அளித்த அவர், “நான் மாலை அணிவிப்பதற்காக காலையில் காந்தி மண்டபம் சென்ற நிலையில், ஆளுநர் வருகையால் என்னை அனுமதிக்கவில்லை. இதனால், நான் காமராஜர் மணிமண்டபம் சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினேன். மாநாட்டிற்குச் செல்ல 6 மணி நேரம் ஆகும் என்பதால், அங்கிருந்து புறப்பட்டேன்.

தமிழிசை சௌந்தரராஜன் மது அருந்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. அதே போன்றுதான் நானும் இதுவரை ஒரு துளி சொட்டு கூட மது அருந்தியதில்லை. நான் மதுவை பரிசோதனை செய்யும் விஞ்ஞானி பிரிவில் வேலை செய்தவன்” என்றார்.

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பல்வேறு வடிவங்களில் போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளது. இளம் வயதில் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் மனிதவளம் பாழாகிறது. திமுகவுக்கும் மதுவிலக்கில் கொள்கை அளவில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற உடன்பாடு உள்ளது. தேசிய மதுவிலக்குக் கொள்கை மூலம் நாடு முழுவதும் மது விலக்கு வேண்டும் என மத்திய அரசிடமும், மாநிலத்தில் மது விலக்கு வேண்டும் என தமிழக அரசிடமும் கோரிக்கை வைக்கிறோம்.

தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்றார் கருணாநிதி. மதுக்கடைகளை மூட முடியாது என மு.க.ஸ்டாலின் கூறவில்லை. நிர்வாக ரீதியில் சிக்கல் இருப்பதாக கூறினார். மதுப்பழக்கத்தால் இந்துக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்துகள் மீது அக்கறை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தேசிய அளவில் மது ஒழிப்புக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேர்தல் அரசியல் வேண்டாம் என்ற நிலையைகூட நான் எடுக்க தயாராக உள்ளேன்”

இவ்வாறு  திருமாவளவன் பேசினார்.