சென்னை: திமுக அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு  தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரித்து வந்தது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்ததும்,   இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என அமைச்சர்கள் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம்,  தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அறிக்கையை ஏற்று  சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மற்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதுகுறித்து கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை, ஆட்சியாளர்களுக்கு தகுந்த வாறு பச்சோந்தி போல செயல்படுவதாக கூறியதுடன், தானேகவே இந்த வழக்குகளை  மறுஆய்வுக்கு எடுத்து விசாரித்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில்  ஆகஸ்ட் 7ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசுவின் மனைவி ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதோடு, தினசரி விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவருடைய மனைவி டி.மணிமேகலை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் உச்சநீதிமன்றத்திக் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்களை உச்சநீதி மன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது.