திருநெல்வேலி: ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த திமுக பிரமுகர் மனைவி, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டம் பெற்றார். இந்த விழாவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் 739 பேருக்கு ஆளுநர் ரவி நேரடியாக பட்டம் வழங்கினார் .
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் 32வது பட்டமளிப்பு விழா நேற்று வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகம் மற்றும் அதன் 104 உறுப்புக் கல்லூரிகளில் படித்த 37,376 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்தநிகழ்ச்சியில், பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், விழாவில் பங்கேற்கவில்லை. பல்கலை.யில் நடைபெற்ற கடந்த 3 பட்டமளிப்பு விழாக்களிலும் இணைவேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்கவில்லை என்ற நிலையில், இதிலும் பங்கேற்கவில்லை. இ,தைத்தொடர்ந்து விழா தொடங்கியதும், துணைவேந்தர் ந.சந்திரசேகர் வரவேற்றார். இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநர் அ.பி.டிம்ரி பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.
பின்னர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது மாணவ மாணவிகளுக்கு ஆளுநர் ரவி பட்டங்களை வழங்கி வந்த நிலையில், நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி வி.ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநரிடம் பட்டம் பெறாமல், பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகரிடம் பட்டச் சான்றிதழை கொடுத்து, அவர் மூலம் பட்டம் வாங்கினார். அப்போது துணைவேந்தர் ‘ஆளுநரிடம் கொடுத்து பட்டம் வாங்குங்கள்’ என்று கூறினார். தனக்கு விருப்பமில்லை என்று மாணவி கூறினார். ஆளுநரும் ‘ஓகே’ என்று கூறியதையடுத்து,பட்டச் சான்றிதழை துணைவேந்தரே கொடுத்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால், அதை கண்டுகொள்ளாத ஆளுநர் தொடர்ந்து மற்ற மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 739 பேருக்கு ஆளுநர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
இதற்கிடையில், ஆளுநரிடம் இருந்து பட்டத்தை பெற மறுத்த மாணவி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஜீன் ஜோசப், “தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் எதுவும் செய்யாத ஆளுநரிடம் பட்டம் பெற எனக்கு விருப்பமில்லை” என்றார்.

இதையடுத்து ஜான் ஜோசப் யார் என்ற தகவல்கள் வெளியானது. இவரது கணவர் ராஜன், நாகர்கோவில் மாநகர திமுக துணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார் என்பதும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என்றும் கூறப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் உள்பட ஒவ்வொருவரும் ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருக்கலாம். ஆனால், இதுபோன்ற ஒரு பொதுநிகழ்வில் ஒருவரை அவமதிப்பது, தமிழ்நாட்டுக்கே அவமானம், என்றும், இதுபோல ஆசிரியர்கள் மாற்று மதத்தினரே, மாற்று கருத்து உள்ளவர்கள் பாடம் நடத்தினால், அவர்களிடம் இவரைப்போன்றவர்கள் பாடம் படிக்க மாட்டார்களா என நெட்டிசன்கள்கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கல்விச்சாலைகளையும் தங்களது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தாதீர்கள் என கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், அது தமிழ்நாட்டுக்கு அவமானம் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதற்கிடையில், மாணவியின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, இதுபோல முதல்வர் நிகழ்ச்சியில் ஒருவர் அவரை புறக்கணித்து, மாற்றாரிடம் பெற்றால் அது சரியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.