சென்னை: முதல்வர் விழாவுக்கு வாகனங்களை அனுப்புமாறு தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கடிதம் எழுதி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கடிதத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு ஆட்சிக்கு வந்தாலும், அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு, அரசு வாகனங்கள், பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பள்ளி வாகனங்களையும் மிரட்டி அழைத்துச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதுமட்டுமின்றி பல அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளையும் அழைத்துச் சென்று பல மணி நேரம் காக்க வைக்க செய்வதும், சாலையோரங்களில் வரவேற்பு என்ற பெயரில் கால்கடுக்க நிற்க வைக்கப்படுவதும் தொடர்கிறது.
இதுதொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம், அரசு மற்றும் அரசியல் பொது நிகழ்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைப்பதை கடுமையாக கண்டித்தார். இருந்தாலும் இந்த அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் பங்கேற்கும் விழாவுக்காக தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சார்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், வரும் 19.04.2025 அன்று, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள ஆண்டார்குப்பம் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவிருப்பதாகவும், அதற்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளிகளில் இயங்கும் பேருந்துகளை, நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திமுக அரசு நடத்தும் நிகழ்ச்சிகள் என்றாலே, பொதுமக்கள், வணிக நிறுவனங்களிடம் வசூல் வேட்டை முதற்கொண்டு, கூட்டத்தை காட்டுவதற்காக, நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான ஊதியம் தரமாட்டோம் என்று கூறி ஏழை எளிய மக்களை மிரட்டி அழைத்து வருவது, தனியார் பள்ளி, கல்லூரிகளை மிரட்டி வாகனங்களை வாங்குவது என, அடாவடித்தனம் செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளது.
தென்காசியில், அரசு மருத்துவர்களிடமே கட்டாய வசூல் வேட்டை நடத்தப்பட்ட செய்திகள் வெளிவந்துள்ளதாகவும், இப்படி, பொதுமக்களுக்குத் தொடர்ந்து இன்னல்களைக் கொடுக்கும் திமுகவின் இந்த அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். உங்கள் கட்சிக்காரர்களிடம் இல்லாத கல்லூரிகளா, பள்ளிகளா? எதற்காக, சாமானிய மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்றும் அண்ணாமலை சாடியுள்ளார்.