சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் (68) இன்று காலை உடல்நல குறைவால் காலமானார்.

இயக்குனர் வேலு பிரபாகரனுக்கு கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணிக்கு காலமானார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இயக்குனர் வேலுபிரபாகரன் முதலில் பி ஜெயாதேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு தன்னுடைய 60வது வயதில் நடிகை ஷிர்லே தாஸ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் நடிகை ஷிர்லே தாஸ் வேலு பிரபாகரன் உடன் காதல் காதல் என்கிற திரைப்படத்தில் பணியாற்றினார். அவர் 60 வயதில் நடிகையை இரண்டாம் திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய அளவில் பேசுபொருள் ஆனது குறிப்பிடத்தக்கது.
வேலுபிரபாகரன் 1980-ம் ஆண்டு வெளிவந்த இவர்கள் வித்தியாசமானவர்கள் என்கிற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இதையடுத்து 1989-ல் வெளிவந்த நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த வேலு பிரபாகரன், அப்படம் ஹிட்டானதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை அதிசய மனிதன் என்கிற பெயரில் கடந்த 1990-ம் ஆண்டு எடுத்தார்.
பின்னர் ஆர்.கே.செல்வமணி தயாரித்த அசுரன், ராஜாகிளி என இரண்டு படங்களை இயக்கினார் வேலு பிரபாகரன். இந்த இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. பின்னர் அருண் பாண்டியனை வைத்து கடவுள், நெப்போலியன் நடித்த சிவன், சத்யராஜின் புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கிய வேலுபிரபாகரனுக்கு வெற்றி எட்டவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் சிறிது காலம் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர், நடிகராக களமிறங்கினார். அந்த வகையில் பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
மறைந்த வேலுபிரபாகரன் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.