திண்டுக்கல் மாவட்டம், கண்ணாபட்டி, அருள்மிகு விஸ்வநாதர் ஆலயம்

திருவிழா:

வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, திருக்கார்த்திகை, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ நாட்கள், கார்த்திகை சோமவாரம்.

தல சிறப்பு:

கோயில் எதிரே வைகை நதி ஓடுகிறது. இவ்வூரை ஒட்டிய பகுதிகளில் மேற்கிலிருந்து கிழக்காக பாயும் வைகை நதி, கோயில் அருகில் மட்டும் தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. இதை “உத்தரவாகினி’ என்பர். காசியில் கங்கை நதியும் இவ்வாறே பாய்வதால், இத்தலத்தை காசிக்கு நிகரானதாகச் சொல்கிறார்கள்.

பொது தகவல்:

சிருங்கேரி மடத்தின் 25வது பீடாதிபதி சச்சிதானந்த பாரதி மகாசுவாமிகளின் அவதார தலம் இது.

1623 – 1663 வரையில் சிருங்கேரி மடத்தை நிர்வகித்தவர் இவர். இவரே சிருங்கேரி மடத்தின் முந்தைய 24 பீடாதிபதிகளின் வரலாற்றைத் தொகுத்தவர்.

மதுரை மீனாட்சியம்மனைப் போற்றியும் இவர் பாடல்கள் இயற்றியுள்ளார்.

இவருக்கு இக்கோயில் அருகில் மண்டபம் உள்ளது.

ஆவணி மாத ரோகிணி நட்சத்திரத்தன்று இவருக்கு திருநட்சத்திர விழா நடக்கும்.

அப்போது, இக்கோயிலில் ஏகாதச ருத்ரஜெப யாகத்துடன், சிவன், அம்பிகைக்கு விசேஷ அபிஷேக, பூஜைகள் நடக்கும்.

சமஸ்கிருத மொழிக்கு முதன்முதலாக தமிழில் அகராதி வெளியிட்ட அரங்க கிருஷ்ண சாஸ்திரிகளும் இவ்வூரில் பிறந்தவரே ஆவார்.

பிரார்த்தனை:

மரண பயம் நீங்க, பாவம் நீங்கி, முக்தி கிடைக்க இங்குள்ள வைகை நதியில் நீராடுகின்றனர்.

நோயால் அவதிப்படுவோர் குணமாகவும், ஜாதக தோஷம் அல்லது நாக தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்குள்ள விசாலாட்சி அம்மனை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுகின்றனர். நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுவோர் குணமாகவும் இங்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்து, நெய் தீபம் ஏற்றியும், விசாலாட்சிக்கு இனிப்பு பாயசம், சர்க்கரைப்பொங்கல் மற்றும் இனிப்பு பதார்த்தங்கள் நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர்.

திருமண வழிபாடு:

விசாலாட்சி அம்பாள் பிரசித்தி பெற்றதால், இப்பகுதியில் விசாலாட்சி கோயில் என்றால்தான் தெரியும். பிரதான வாசலும் இவளது சன்னதி எதிரே அமைந்துள்ளது.

ஜாதக தோஷம் அல்லது நாக தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், இவளுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர்.

அப்போது, அம்பாளுக்கு பூஜித்த மாலையை பிரசாதமாகத் தருவர். அதை எடுத்துச் சென்று, வீட்டில் வைத்து வழிபட்டு வர விரைவில் தோஷம் நீங்கி நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

வில்வ மரத்தடியில் அஷ்ட நாகர்களுடன் உள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றியும் வணங்குகின்றனர்.

ராகு கேது தோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் வணங்குவதுண்டு.

ஆற்றில் கிடைத்த நந்தி:

ஒருசமயம் வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆற்றில் அடித்து வரப்பட்ட நந்தியும், வலம்புரி சங்கும் கரையில் ஒதுங்கியது. இந்த நந்தியை சுவாமி சன்னதி முன், பிரதிஷ்டை செய்துள்ளனர்.

பிரதோஷ நாட்கள், கார்த்திகை சோமவாரம், சிவராத்திரி ஆகிய விசேஷ காலங்களில் மட்டும், வலம்புரி சங்கில் தீர்த்தம் எடுத்து விஸ்வநாதருக்கு பூஜை செய்கின்றனர்.

வைகையில் கிடைத்த சங்கரலிங்கம் சன்னதி பிரகாரத்தில் உள்ளது.சந்திரன், விநாயகர், ஐயப்பன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நவக்கிரகம், காலபைரவர், சூரியன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர்.

கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி தனிச்சன்னதி அமைப்பில் காட்சி தருகிறார்.

தல வரலாறு:

இப்பகுதியில் வசித்த சிவபக்தர் ஒருவர், தினமும் சிவனடியார் ஒருவருக்கு அன்னம் பரிமாறி, அதன்பின் தான் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒருசமயம் சிவனடியார் எவரும் அவர் கண்ணில் படவில்லை. தன் பணியாளரை ஊருக்குள் யாரேனும் சிவனடியார் இருந்தால் அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார்.

வைகை நதியில் சிவனடியார் ஒருவர் நீராடிக் கொண்டிருந்ததைக் கண்ட பணியாளர், சிவபக்தரிடம் வந்து தகவல் சொன்னார். அவர் சென்று அழைத்தார். “நானும் சிவ தரிசனம் செய்தபின்தான் சாப்பிடுவது வழக்கம்!’ என்றவர், தன்னை ஒரு சிவாலயத்திற்கு அழைத்துச் செல்லும்படி வேண்டினார்.

அப்போதுதான், “அங்கு சிவாலயம் எதுவுமில்லை’ என்ற உண்மை சிவபக்தருக்கு உரைத்தது. இதைக்கேட்டு கோபம் கொண்ட அடியவர், சிவனுக்கு கோயில் இல்லா ஊரில் உபசரிப்பைக்கூட ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனச் சொல்லி சென்று விட்டார்.

இதனால், வருந்திய பக்தர் உடனே காசி சென்று ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார். இவருக்கு “விஸ்வநாதர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. பிற்காலத்தில் விசாலாட்சி அம்பிகைக்கும் சன்னதி கட்டப்பட்டது.

சிறப்பம்சம்:

கோயில் எதிரே வைகை நதி ஓடுகிறது. இவ்வூரை ஒட்டிய பகுதிகளில் மேற்கிலிருந்து கிழக்காக பாயும் வைகை நதி, கோயில் அருகில் மட்டும் தெற்கிலிருந்து வடக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. இதை “உத்தரவாகினி’ என்பர். காசியில் கங்கை நதியும் இவ்வாறே பாய்வதால், இத்தலத்தை காசிக்கு நிகரானதாகச் சொல்கிறார்கள்.

அமைவிடம்:

மதுரையில் இருந்து (36 கி.மீ.,) உசிலம்பட்டி சென்று, அங்கிருந்து வத்தலக்குண்டு செல்லும் பஸ்களில் 18 கி.மீ., சென்றால் கண்ணாபட்டி தலத்தை அடையலாம். வத்தலக்குண்டில் இருந்து 8 கி.மீ. பஸ் ஸ்டாப்பில் இருந்து சிறிது தூரத்தில் இக்கோயில் உள்ளது.