அருள்மிகு சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில், கோவிலூர், தர்மபுரி மாவட்டம்.

17ம் நூற்றாண்டில் மைசூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இவ்வூர் இருந்தபோது, இந்த கோயிலுக்கு மன்னர்களால் ஸ்ரோத்ரியம் எனப்படும் மானியம் வழங்கப்பட்டது. எனவே இவ்வூருக்கு ஸ்ரோதிரியம் கோவிலூர் என்ற பெயர் இப்போதும் இருக்கிறது. மைசூர் அரச குடும்பத்தினர் சென்னகேஸ்வரப் பெருமாளிடம் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தனர். அதன் பலனாக ஆண் சந்ததிகளை பெற்றனர். இவரை ஏழுமலையான் வெங்கடாசலபதியின் மூத்த சகோதரர் என சொல்கிறார்கள். பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வமாக இவர் விளங்குகிறார்.

இக்கோயிலில் சர்க்கரை கலந்த பொட்டுக்கடலை மாவு பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது. விஷ்ணு கோயில்களில் பொதுவாக பைரவர் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தலத்தில் மூலவரின் அருகிலேயே பைரவர் குடிகொண்டுள்ளார். மேலும் இந்த தலத்தில் சிவன் சன்னதியும் உண்டு. இங்குள்ள ஆஞ்சநேயர் கையில் வாளுடன் உள்ளார். எனவே வீர ஆஞ்சநேயர் எனப்படுகிறார். சென்னகேஸ்வர பெருமாளின் விக்ரகம் சில சமயங்களில் நரசிம்மரைப்போலவே காட்சி தருகிறது.

மேலும் இராமானுஜர், விஸ்வக்சேனர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர். இவரை ஆராதித்தால் அனைத்து நலன்களும் பெருகும். இந்த கோயில் அன்னை அமைந்த இடத்தை ருத்ரபூமி என தேவப்பிரசன்னத்தில் கூறியதால் சிவலிங்கப் பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. உற்சவருடன் ஸ்ரீதேவி, பூதேவி, காட்சி தருகின்றனர்.

இங்கு ஆங்கில புத்தாண்டை ஒட்டி ஸ்ரீசாஸ்தர பூஜையும், நவக்கிரக பூஜையும், சென்னகேஸ்வர பெருமாளுக்கு புத்தாண்டு திருமஞ்சனம், ஆராதனை, நைவேத்தியத்துடன் இணைந்து செய்யப்படுகிறது.

இத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருத்தலங்கள் : அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், அருள்மிகு பேட்டைராய சுவாமி திருக்கோயில், அருள்மிகு சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில்.

திருவிழா:

புரட்டாசி, மார்கழி மாதங்கள் மிகவும் விசேஷ மாதங்களாகும். புரட்டாசி மூன்றாவது சனியன்று ஏராளமான கூட்டம் வரும். மார்கழியில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆங்கிலப் புத்தாண்டு அன்று சிறப்பு பூஜைகள் உண்டு. சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இங்கு சிறப்புபூஜை செய்து கிளம்புகின்றனர்.

கோரிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்