டெல்லி: இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ எனக் குறிப்பிடலாம் என்று  மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்த நிலையில், திடீரென செப்டம்பர் 9ந்தேதி பிசியோதெரபிஸ்டுகள் டாக்டர்கள் என போடக்கூடாது என திடீர் தடை விதித்தது.

இந்த நிலையில், செப்டம்பர் 10ந்தேதி அந்த உத்தரவை மாற்றி, பிசியோதெரபி  மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ எனக் குறிப்பிடலாம் என உத்தரவிட்டு உள்ளது. மத்தியஅரசின் இந்த குழப்பமான உத்தரவுகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

 நாட்டில் பிசியோதெரபி மருத்துவர்கள் ‘டாக்டர்’ என தங்கள் பெயருக்கு முன்னால் பயன்படுத்தலாம் பல ஆண்டு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில்,   கடந்த 2025 மார்ச் மாதம் மத்திய அரசு முதலில் அறிவித்தது.

இதற்கு எதிராக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பயிற்சி பெறும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் பிற அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியது.

இதையடுத்து,   செப். 9 ஆம் தேதி பிசியோதெரபி பயின்றவர்களை ‘டாக்டர்’ என குறிப்பிடக் கூடாது என்று உத்தரவிட்டது.   இதுதொடர்பாக,  மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டது. அதில்,   “பிசியோதெரபிஸ்டுகள் மருத்துவர்களாக பயிற்சி பெறவில்லை,. எனவே அவர்கள், தங்களை டாக்டர் என்று கூறக் கூடாது, தங்கள் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ என பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இது நோயாளிகளையும் மக்களையும் தவறாக வழிநடத்தும். இது போலி மருத்துவத்திற்கு வழிவகுக்கும்” என்று அ குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த உத்தரவு ஒரே நாளில் மாற்றப்பட்டு உள்ளது. அதாவது செப். 10 அன்று மத்திய அரசு  9ந்தேதி வெளியிட்ட  உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதால் உத்தரவு திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.

அதன்படி, பிசியோதெரபி நிபுணர்கள் ‘டாக்டர்’ என தங்கள் பெயருடன் சேர்த்துக்கொள்ளலாம். அறிவிப்பு கடிதத்தின்படி இந்த விவகாரம் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவே கருதப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து கடுமையாக விமர்சித்த,  இந்திய மருத்துவ சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் திலீப் பனுஷாலி, ‘மத்திய அரசு 8 மணி நேரத்தில் தனது முடிவை மாற்றியுள்ளது. இது ஒரு கொடூரமான நகைச்சுவை’ என்று கூறினார்.

மேலும், ‘ நாங்கள் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகவிருக்கிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. தமிழ்நாடு மற்றும் கேரள உயர் நீதிமன்றங்கள், பிசியோதெரபிஸ்டுகள் தங்கள் பெயர்களில் ‘டாக்டர்’ என பயன்படுத்தக் கூடாது என ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்துள்ளன” என்று கூறினார்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனது முடிவுகளை தொடர்ந்து மாற்றிக் கொண்டிருப்பது மருத்துவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.