தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், துணை அதிபராக இருந்தமுகமது முக்பர்  தற்காலிக அதிபராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில்  நடந்த அணை திறப்பு விழாவில் கலந்துகொண்டு விட்டு வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் திரும்பிய நிலையில், அஜர்பைஜான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஜோல்பா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.  மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர்  முற்றிலும் எரிந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் உடன் சென்றவர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் உயிரிழந்ததாக அந்நாட்டு மக்களுக்கு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானில் உள்ள புனித தலமான இமாம் ரேஸாவில் வைத்து மரணம் அறிவிக்கப்பட்டது.  அவருடன் பயணித்த 8 பேரும் மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, தற்காலிக அதிபராக முகமது முக்பர் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர் விரைவில் அதிபராக பதவியேற்க உள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்ததைத் தொடர்ந்து, “சிறிய இடையூறு இல்லாமல்” தொடர்ந்து செயல்படும் என்று ஈரான் அரசாங்கம் உறுதியளிக்கிறது. “அயத்துல்லா ரைசியின் அயராத ஆவியுடன் சேவையின் பாதை தொடரும் என்று விசுவாசமான தேசத்திற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,  50 நாட்களுக்குள் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும்  வகையில் தேர்தல் நடைபெற உள்ளது.