பெங்களூரு

பாலியல் புகாரில் சிக்கி கைதான பிரிஜ்வல் ரேவண்ணாவை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வரும் பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார்.மஜத சார்பில்  பிரஜ்வல் ரேவண்ணா, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார் . ஏப்ரல் 26 ஆம் தேதி அவரது தொகுதியில் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் நடைபெறுதற்கு சில நாட்களுக்கு முன்பு ஹாசனில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் வெளியானது. அவர் தொடர்பான சுமார் 2 ஆயிரத்து 900 ஆபாச வீடியோக்கள் அடில் இருந்தன.  ஹாசன்ல் இந்த பென் டிரைவ்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது.

ஹாசனில் தேர்தல் நடந்து முடிந்த கையோடு மறுநாள் 27 ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் பிரஜ்வல் ரேவண்ணா விமானம் மூலம் ஜெர்மனிக்கு சென்றார். இந்த ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன் சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. இது நாடாளுமன்ற தேர்தல் பிரசார களத்தில் தீவிரமானது.

இது குறித்து விசாரிக்க கர்நாடக அரசு, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து உத்தரவிட்டது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது 3 பெண்கள் தனித்தனியாக பாலியல் பலாத்கார புகார் அளித்ததன் அடிப்படையில் அவர் மீது 3 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டன. விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எஸ்.ஐ.டி. போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

அவருக்கு 7 நாட்கள் காலஅவகாசம் கோரிய அவர் அதன் பிறகு நேரில் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.  தான் 31 ஆம் தேதி பெங்களூருவுக்கு வந்து போலீசாரிடம் சரண் அடைவதாக வீடியோ மூலம் அவர் அறிவித்தார்.

நேற்று மாலை 4 மணிக்கு ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து ‘லுப்தான்சா’ விமானத்தில் புறப்பட்டுசுமார் 9 மணி நேரம் பயணித்து நள்ளிரவு சுமார் 12.50 மணிக்கு அவர் வந்த விமானம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.  அங்கு பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

இன்று பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு காவல்துறக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.